Saturday 24 March 2012

சியாட்டிலில் என் 'ரெஸ்ட் ரூம்' அனுபவம்

ஒலிம்பியாவில் நானும் என் மனைவியும்
என் இளைய மகன் க.கிருஷ்ணகுமார் TCS நிறுவனத்தில் பணியாற்றும் பொழுது அமெரிக்காவின் சியாட்டில் என்ற நகரில் Foothill commons என்ற பகுதியில் தன மனைவியுடன் வசித்து வந்தார். 2002 ல் நான் என் மனைவியுடன் சியாட்டில் சென்றிருந்தேன். இது வாஷிங்டன் என்ற மாகாணத்தில் இருக்கிறது (வாஷிங்டன் DC வேறு). இந்த மாகாணத்தை 'என்றும் பசுமை மாகாணம்' (Evergreen state) என்கின்றனர். இதன் தலைநகரம் 'ஒலிம்பியா' எனப்படுகிறது.

அங்கு சியாட்டில் சென்ற ஓரிரு நாட்களில் ஒரு வார இறுதியில் 'துலிப் மலர் வயல்வெளி'யைக் காண காரில் சென்று கொண்டிருந்தோம். குமார் கார் ஓட்டிக் கொண்டிருந்தார். நான் என் மகனிடம், 'குமார், காரை ஓரமாக நிறுத்து, சிறுநீர் கழிக்க வேண்டும்' என்றேன். 'ஐயோ, அப்பா, இங்கெல்லாம் நினைத்த இடத்தில் ரோட்டோரத்தில் போக முடியாது' என்று சொல்லி ஒரு கால் மணி நேரப் பயணத்துக்குப் பின் சாலையோர பகுதி ஓய்வகத்தில் (Rest room) நிறுத்தினார். சுமார் 20 வாகனங்கள் நிறுத்துமளவு இடவசதியிருந்தது.

அங்கு எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தனியாக ஒரு திறந்த அறையில் இருவர் எங்களை வரவேற்று, ஓய்வுப் பகுதிக்கு வருவோர்க்கு உதவ தட்டில் பிஸ்கட்டுகளும், பெரிய கோப்பையில் காபி அல்லது தேநீர் அளித்தனர். அனைத்தும் இலவசம். இவைகள் போக்குவரத்துத் துறை செலவில் அளிக்கின்றனர். நல்ல வசதியான சுகாதாரமான கழிப்பறைகள் இருந்தன. வேறு சில வழிகாட்டி அட்டைகளும் இருந்தன. சுற்றுலாவுக்கும் பயணத்திற்கும் வெளிநாட்டில் அவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள்.

துலிப் வயல் வெளியிலும் ஒரே ஒரு கழிப்பறை இருந்தது. அதில் செல்வதற்கு நீண்ட வரிசை. 'Are you in queue' என்று கேட்டு வரிசையில் சேர்ந்து கொள்கிறார்கள். நான் முந்தி, நீ முந்தி என்று தள்ளு முள்ளு இல்லை.

இதுபோல நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர்க்கு உதவ பல இடங்களில் Rest room கள் இருக்கின்றன. இதை ஏன் நம் நாட்டிலும் செயல்படுத்தக் கூடாது? நம் ஊரில் பேருந்து நிலையங்களிலும், நெடுஞ்சாலைப் பயணங்களிலும் நல்ல உணவகங்களும், கழிப்பறைகளும் இருப்பதில்லை. இருப்பவைகள் அரசியல்வாதிகளால் வியாபாரமாக்கப்படுகின்றன.  

டென்மார்க்கில் 'தெருவில் சிறுநீர் கழித்தால் 1000 குறோணர் தண்டம்' என்ற சட்டம் அமலில் இருப்பதை அறிந்தேன். ஆனால், இங்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழிக்கலாம், மலம் கழிக்க ஒதுங்கலாம் என்பதே நடைமுறையாக இருக்கிறது. அருகில் வீடு இருக்கிறதே, பெண் பிள்ளைகள் இருக்கிறார்களே என்ற அறிவும் கிடையாது, கூச்சமும் கிடையாது.

பொது இடங்களில் சிறு நீர், மலம் கழிப்பது, புகை பிடிப்பது, பிரேத ஊர்வலத்தில் வழிநெடுகிலும் மலர் மாலைகளைப் பிய்த்தெறிந்து சாலைகளை அசிங்கப்படுத்துவது, திருமணம் மற்றும் அரசியல் ஊர்வலங்களில் 1000 முதல் 10000 வரை வெடியை வெடிக்கச் செய்து ஆபத்தை வரவழைத்து, ஊரையும் அசிங்கப்படுத்துவது கண்டிப்பாக சட்டம் போட்டு தடுத்தாலொழிய மக்கள் திருந்தப் போவதில்லை.

1 comment:

  1. http://dharumi.blogspot.in/2006/11/188.html .. வாசித்துப் பாருங்கள்

    ReplyDelete