Tuesday 26 June 2012

பூசைக்கேற்ற மலர்கள்


மலர்கள் கொண்டு பூசை செய்வதில் சில மரபுகளை ஆன்றோர்கள் பின்பற்றியுள்ளனர். அவற்றுள் எண்மலர்கள் கொண்டு பூசை செய்வதும் ஒன்றாகும். அவையாவன புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், ந்ந்தியாவர்த்தம், நீலோற்பவம், பாதிரி, அலரி, செந்தாமரை. இதனை புட்பவிதி பாடல் 20 ல்

இலகிய புன்னைவெள் ளெருக்குச் சண்பக
நிலவிய வலம்புரி, நீலம், பாதிரி
அலரிசெந் தாமரை யஷ்ட புஷ்பமாம்
புலரியம் போதொடெப் பொழுதும் சாத்தலாம்

என்று சொல்லப்படுகிறது.

எண்மலர்கள்:

புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு ஆகியவை கோட்டுப்பூக்களாகும். இவை மரங்களிலிருந்து கிடைப்பவை.

வலம்புரி (நந்தியாவர்த்தம்), அலரி (அல்லி) இரண்டும் நிலப்பூ வகையாகும். புதர்ச்செடிகளிலிருந்து கிடைப்பவை.

நீலோத்பவம் (குவளை), தாமரை இரண்டும் நீர்ப்பூ வகையாகும். இவை குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்களிலிருந்து கிடைப்பவை.

காலை, உச்சிப்பொழுது, அர்த்தயாமம் என்று பூசைக்கு வெவ்வேறு மலர்கள் சொல்லப்பட்டிருந்தாலும், எக்காலத்திற்கும் பூசைக்குரிய மேற்கூறிய எண்மலர்கள் ஏற்புடையதாகும்.

திருவதிகை வீரட்டானேஸ்வரர்  கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்ட்த்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீரசைவக்  கோவில்களுள் ஒன்று. அப்பர், சம்பந்தர்,சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.

எண்மலர்கள் கொண்டு சிவபெருமானைப் பூசித்தால் கரும்புக் கட்டியில் தேன் கலந்ததைப் போல இனிமையும் தரும், வினைகளும் ஒழியும் என்கிறார் நாவுக்கரசர்.

எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லர்இடு வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்டனார்அடி சேரும் அவருக்கே

மலர்களைக் கிள்ளிப் பூசித்தால்  பாக்கியச் சிதைவு ஏற்படும் என்பதால், மலர்களைக் கிள்ளாமல் முழுவடிவில் அர்ச்சிப்பதே சிறந்தது. ஆகம விதிகளின்படி பூசையின் இறுதியில் எண்மலர்கள் கொண்டு அர்ச்சிப்பது உயர்ந்தது என்கிறார் நாவுக்கரசர்.

Saturday 16 June 2012

ஆசிரியர் - மாணவர் நல்லுறவின் வெளிப்பாடு - 'சித்த மருத்துவ பேராசிரியர் டாக்டர்.ஜெயபிரகாஷ் நாராயணனின் கடிதம்'


என் மூன்றாவது தம்பி குருநாதன் 1973 ஜூலை மாதத்திற்குப் பின் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையிலுள்ள மாணவர் விடுதியில் தங்கிப படித்து வந்தான். முதலாம் ஆண்டிலேயே மாணவர் சங்க உதவி செயலாளராக இருந்து, ஒரு பேராசிரியரிடம் தலைமை செவிலியர் மரியாதைக் குறைவாக பேசினார் என்பதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு படிப்பில் பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 1981 இறுதியில் BIM முடித்தான்.

1982 சனவரியில் உதவி சித்த மருத்துவராக வட ஆற்காடு மாவட்டம் ஆலங்காயம் என்ற ஊரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தா(ர்)ன்.

குருநாதன் கல்லூரியில் மாணவனாக படிக்கும் காலத்தில் ஆசிரியர்களிடம் பெருமதிப்பு வைத்திருந்தார். முதிய மாணவர்கள், இளம் மாணவர்கள், சம வகுப்பில் படித்தவர்கள் என்று அனைவருடனும் அன்பும், நட்பும் கொண்டு உறவினர்கள் போலவே பழகி வந்தார்.

கல்லூரியில் நடக்கும் விழாக்களில் பாட்டு, நாடகம் போன்ற கலைகளில் கலந்து கொண்டு பரிசுகளும் வாங்கியுள்ளார். 'இசைச் சித்தர்' சிதம்பரம் ஜெயராமன் பாடல்களை இனிமையாகப் பாடுவார். அலைபேசி வசதி இல்லாத அக்காலத்தில் கடிதப் போக்குவரத்துதான். மாணவப் பருவத்தில் அவர்க்கு நண்பர்களிடமிருந்து வந்த கடிதங்கள் நூற்றுக் கணக்கில். அனைத்திலும் அண்ணன், மாமா, தாத்தா, அத்தான், தம்பி, பாஸ் என்று உறவு முறை வைத்து விளித்துத்தான் கடிதங்கள் வந்தன.

ஆலங்காயத்திலிருந்து மாற்றலாகி உசிலம்பட்டி மருத்துவமனையில் பணியில் சேர்ந்த பொழுது 1984 ல் திருமணம் நடந்தது. அப்பொழுது சோழவந்தானிலிருந்தே போய் வந்தார். ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தன தாயார் பெயரையும் சேர்த்து சந்திரவதனா என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர் பெற்றோர்.

பின் விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றல். 1996  மே மாதத்திற்குப் பின் திருச்சி மாவட்டம், ஆரம்ப சுகாதார நிலையம் சோமரசம்பேட்டையில் பணி. பெருங்குடலில் (Rectum carcinoma) புற்று நோய் ஏற்பட்டு, 1997 மார்ச் மாதம் அறுவை சிகிட்சைக்குப் பின் ஆறு மாதங்கள் நலமுடன் வாழ்ந்தார். கடைசியாக சில மாதங்கள் மதுரை யானைமலை ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிந்தார். அதன்பின் பின்விளைவுகளால் 1997  நவம்பர் மாதம் 3 ஆம் தேதி உயிரிழந்தார். 

வேலைக்குச் சென்றபின், திருமணத்திற்குப் பின் வந்த கடிதங்கள் அவர் மனைவியிடம் இருக்க வாய்ப்புண்டு. சித்த மருத்துவக் கல்லூரியில் படிக்கும்பொழுது மருத்துவர்கள் திரு.வேலுச்சாமி, திரு.பசியுதீன் அகமது, திரு.ஜெயபிரகாஷ் நாராயணன் போன்றவர்களை 'அண்ணன்' என்றுதான் அன்போடு அழைத்து பழகி வந்தார்.

சென்ற 31.05.2012 தேதியில் நோய்வாய்ப்பட்டு எங்கள் தாயார் மரணம்  எய்தியதை அடுத்து வீட்டிற்கு வெள்ளையடிக்க சில இடங்களை சுத்தம் செய்தோம். அப்பொழுது பல வருடங்களாக பூட்டியிருந்த அறையிலிருந்து சாமான்களை வெளியிலெடுத்தோம். கத்தையாக குருநாதனுக்கு வந்த கடிதங்கள் கிடைத்தன.

அவற்றில் ஒன்று மருத்துவர்.ஜெயபிரகாஷ் நாராயணன் அவரது ஆசிரியரும், தமிழ்நாடு இந்திய மருத்துவத்துறை இயக்குநருமான திருமிகு.பொன்.குருசிரோன்மணி அவர்களுக்கு எழுதி அனுப்பப்படாமல் (அல்லது அனுப்பியும் இருக்கலாம்) என் தம்பி குருநாதன் வசம் இருந்த கடிதம்.

Dr.P.Jeyaprakash Narayanan M.D,(Siddha)                                     Place: பாளையங்கோட்டை
                                                                                                                                   Date: 2/4/77

பெறுநர்:-
திருமிகு.Dr.பொன்.குருசிரோன்மணி B.A, G.C.I.M அவர்கள்,
தமிழ்நாடு இந்திய மருத்துவத்துறை இயக்குநர். 
பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு

  
இதய நிறைவான வணக்கம். இறைவன் திருவருளால் இங்கு நட்பும் சுற்றமும் நலம். இதுபோல் அங்கு தாங்களும் சுற்றமும் நட்பும் நலமுடன் திகழ இறைஞ்சுகிறேன்.
  
"விரிவுரையாளர்" பதவி உயர்வு ஆணை கிடைக்கப் பெற்றேன். தங்கள் அன்பிற்கும் அருளிற்கும் எனது நன்றி.

யார் எதைச் சொன்னாலும் நான் உங்களால் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு.

தனக்கே உரிய தனிக்கோட்பாடுகளை என்றும் தளரவிடாது ஏறுநடை போடுகின்ற அரிமா தாங்கள்.

"சித்த மருத்துவ வளர்ச்சிக் குழு" தனி அதிகாரி பொறுப்பிற்கு அழைத்தீர்கள் . பின் கல்லூரியிலேயே பணியாற்றப் பணித்தீர்கள். இரண்டிற்கும் சரி என்றேன். 

இருபது ஆண்டு காலமாக சித்த மருத்துவத் துறையின் வளர்ச்சிகள் - குறைபாடுகள் அனைத்தையும் நன்கு அறிந்தவர்கள் நீங்கள்.

இன்று கொள்கைகளை உருவாக்கி அதற்குச் செயல்வடிவம் தருகின்ற சிற்பியாக அமைந்திருக்கிறீர்கள்.

அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தொலைவிலிருந்து கேலி பேசியவர்கள் இப்போது நன்கு குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதைப்பற்றி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. தெய்வீக நியதிகளை நான் உறுதியாக நம்புகிறேன்.

உங்களுக்கு நான் என்றும் தலைவணங்குகிறேன். அது எனது கடமை மட்டுமல்ல - உரிமையுங் கூட.

உங்களுக்குப் பக்கத்திலே நிற்கிறோம் என்ற நினைப்பில் இங்கே சில பரிவாரமூர்த்திகள் அவர்களுக்கும் பயப்படவேண்டும் என எண்ணுகிறார்கள் - அது எப்படி முடியும்! தெய்வத்திற்குக் கொடுக்கின்ற மதிப்பு தேர் இழுக்கிறவனுக்கும் கொடுக்க முடியுமா!

உங்கள் அன்பை வைத்து வியாபாரம் செய்கின்ற அசடுகள் சில அப்படி எதிர்பார்க்கின்றன.

இவர்கள் தேரை இழுக்காவிட்டால் இன்னொருவன் வந்து இழுக்கிறான். நீண்ட தொலைநோக்கோடு திட்டங்களை உருவாக்குகிறீர்கள். அதில் என்னை நீங்கள் "கலசமாக வைத்தாலும் சரி. மிதிபாயாகப் போட்டாலும் சரி" கொடுத்த பணியை முறையாகச் செய்கிறேன்.

அதிகாரத்திலிருக்கும்போது எனக்கு யார் யார் வேண்டுமென்றே கெடுதல்கள் புரிந்தார்களோ அவர்களிடமெல்லாம் இப்போது அன்பாகத்தான் இருக்கிறேன்.

அப்படி இருக்கையில் எனது வாழ்க்கைப் பாதையைத் தொடங்கி வைத்த உங்களிடம் எத்தகைய பற்றுக் கொண்டிருப்பேன் என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்.

உங்களுக்கு இந்த மகிழ்ச்சியான நேரத்தில் என் நன்றியை - என் நெஞ்சத்தில் தாங்கள் குடிகொண்டு என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் முறை இவைகளை தங்கள் திருவடிகளில் சமர்ப்பித்திட எண்ணி எதையெதையோ எழுதி என் நெஞ்சம் எப்படிப்பட்டது என்று விளக்கம் கொடுத்துவிட்டேன்.

என்னை மாணவனாக, மணமகனாக, ஆசிரியனாக, தாங்கள் உயிரையே வைத்திருக்கும் தங்களால் உருவாக்கப்பட்ட இம்மருத்துவக் கல்லூரியில் ஒரு தொண்டனாக என்னை ஆக்கி, தாங்கள் ஆசீர்வதித்து தங்களால் இன்று பதவி உயர்வும் பெற்று நான் நிற்பதை நினைத்து தங்களுக்கு எத்தனை கோடி நன்றி - எப்படிப்பட்ட நன்றி கூற முடியும் என்று எழுத ஆரம்பித்தேன். கடைசியில் தங்களுக்கு ஒரு தலைமகனாக, உண்மை மாணவனாக, தாங்கள் இடும் கட்டளையைச் செய்யும் தொண்டனாக என்றென்றும் இருப்பேன் என உறுதி கூறி தாங்கள் நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி முடிக்கிறேன்.
                                                                          
                                                                                         நன்றியுள்ள -
                                                                   பு ஜெயப்பிரகாசு நாராயணன்.
                                                                                                                      2 /4 /77 .       

"விரிவுரையாளர்" பதவி உயர்வு ஆணை கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து 2/4/77 தேதியிட்டு எழுதிய பணிவான கடிதம். இது மிகுந்த நயத்துடன் முத்து முத்தான கையெழுத்துடன் எழுதப்பட்டது.

இக்கடிதம் ஆசிரியர் - மாணவர் நல்லுறவை இவ்வுலகத்திற்கு எடுத்துக் காட்டும் விதமாக அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன். மருத்துவர் ஜெயப்பிரகாசு நாராயணனின் விலாசமும், அலைபேசி எண்ணும் வலைத்தளத்தில் கண்டுபிடித்து நேற்று அவரிடம் பேசினேன். அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் தற்சமயம் சென்னை அரும்பாக்கம், பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவில் நோயாளிகளை சந்திக்கிறார். அவரது அனுமதி பெற்று இக்கடிதத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.   

எப்படி ஆறுதல் சொல்வேன்? - இரங்கல் கவிதைகள்


தூத்துக்குடியைச் சேர்ந்த திரு.எசேக்கியல் அவர்கள் எனக்கு அறிமுகம். இந்தியன் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று சென்னை, சேலையூர் அருகிலுள்ள மாடம்பாக்கம் என்ற இடத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் எழுத்து தளத்தில் 01-02-2012 முதல் நல்ல கவிதைகள் நிறைய எழுதி வருகிறார். பெரும்பாலும் மரபுக் கவிதைகள். சில புதுக் கவிதைகளும் அடக்கம். இத்தளத்தில் நானும் சுமார் 350 புதுக்கவிதைகள் இயற்றி வெளியிட்டிருக்கிறேன்.

திரு.நிலாசூரியன் என்ற கவிஞர் கவிதை திருவிழாஎன்ற பரிசுப் போட்டியை எழுத்து தள அனுமதியுடன் இம்மாதம் 30 ஆம் தேதி வரை நடத்துகிறார். அதற்கான வழிமுறையாக திரு.எசேக்கியலும் சில குறிப்புகள் தருகிறார்.

பாரதிதாசன் இறந்த பொழுது திரு மு. மேத்தா அவர்கள் 'கண்ணீரில் ஒரு சாட்சி' என்னும் தலைப்பில் எழுதிய பாடல் ஒன்றினை 14.06.2012 தேதியில் எழுத்து.காமில் திரு.எசேக்கியல் அளித்திருக்கிறார்.

"வானம்பாடி வண்ணத் தமிழ்மலர்
போனது மாய்ந்து புவியோர் புலம்ப!
பாரதி தாசன் எனுமொரு பறவை
பாரை மறந்து பறந்தது பறந்தது!

எப்படி இதனைச் செப்பிடு வேன்,நான்?
இப்புவி யினைத்தன் எழுது கோலால்
ஆட்டிப் படைத்த அரசன் மாய்ந்தான்!
வீட்டில் ஏற்றிய விளக்கு அணைந்தது!

அஞ்சா மைக்கு அவனே உவமை!
'
துஞ்சா திருப்பீர்\' எனும்முர சறைந்தான்!
பூட்டிய இரும்புக் கூட்டை உடைத்து
மூட்டிச் சிந்தனை முழக்க மிட்டவன்!

'
பாரில் எங்கும் பைந்தமிழ் பரப்ப
வாரீர்' என்றே கூவிய குயிலவன்!
தமிழ்ப்படைத் தலைவன் ; தாவும் புலியவன்!
தமிழ்ப்பற் றாளரின் தரம்பிரித் தறைபவன்!
தமிழால் பிழைத்திடும் தடியரைச் சுடுபவன்!
செந்தமிழ் ஏறு சாய்ந்தான்
என்தமிழ் நெஞ்சே என்செய் வாயோ?"

இது ஒரு இரங்கல் கவிதை. இதுபோல் வேறு பல பேருடைய இரங்கல் கவிதைகளை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அவற்றையும் படியுங்கள் என்றும், கவிஞனானவன் எப்படிப் பாடுபொருளாக எடுத்துக் கொண்டவரின் குண நலன்களை, வாழ்நாள் முக்கிய குறிப்புகளை எடுத்துக் கூறுகிறான் - நல்லதொரு சொல்லாட்சியுடன் எதுகை மோனையுடன் கூடிய சந்தம் கொண்டு என்று உணரப் பழகுங்கள் என்றும் திரு.எசேக்கியல் கூறியிருக்கிறார்.  

இந்நேரத்தில் மற்றொரு அருமையான இரங்கல் கவிதையை நான் தற்செயலாக காண நேர்ந்தது. கும்பகோணம் பள்ளியில் சூன் 2004 ல் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகளின் சார்பில், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி என்ற ஊரிலிருந்து வெளியாகும் நமது நல்லாசிரியர் என்ற திங்களிதழின் பொறுப்பாசிரியர் புலவர்.துரை.தில்லான் அவர்கள் இயற்றி, சூலை 2004 இதழில் வெளியிட்ட கும்பகோணத்தில் தாயின் அரற்றல்என்ற மனதை உருக்கும் இரங்கல் கவிதை.

குடந்தை நர்சரிப் பள்ளி
கொள்ளிவா யைத்தி றந்து
நடந்ததை யார றிந்தார்? – நூறு
நாற்று மடிந்ததையோ!

பாடம் படிப்ப தற்குப்
பள்ளிக்குச் சென்ற கண்ணே!
கூடம்எ ரிந்த தென்றார் – எனது
கூடும் எரிந்ததையோ!

வண்டின்கால் பட்டால் கூட
வாடுமிதழ் போன்ற வள்நீ
மண்டிய தீக்கு கையில் – உன்னை
மரணம் அணைத்ததையோ!

பள்ளிக்குச் சென்று கற்றால்
பாராள்வாய் என்று சொன்னார்
கொள்ளிக்குள் நீம டிந்தாய் – எனது
கோட்டை இடிந்ததையோ!

நோயில் கிடக்க வில்லை
நூறு கிளிகள் ஒன்றாய்த்
தீயில் கருகினவே –இந்தத்
தீவினை யார்செயலோ?

உன்கையை நான்பி டித்தே
உயிர்விடக் காத்தி ருந்தேன்
என்கையில் நீக ரியாய் – மயிலே
எரிந்து விழுந்தனையே!

அள்ளிக் கொடுத்தா லென்ன?
ஆறுதல் சொன்னா லென்ன?
துள்ளிக் குதித்துவந்து – எனது
தோளில் புரள்வதுண்டோ?

கண்ணீரும் வற்றும், இந்தக்
காவேரி நீரும் வற்றும்
எண்ணாத நாளு முண்டோ – நீஎன்
இல்லத்தின் தெய்வமன்றோ?

குடந்தை நர்சரிப் பள்ளி எரிந்த நாளில், நான் காரைக்காலில் இருந்து கும்பகோணம் வழியாக மதியம் மூன்று மணியளவில் மதுரைக்குச் செல்கிறேன். பேருந்தில் சிலர் மௌனமாகப் பேசிக் கொள்கிறார்கள். அதன் தீவிரத்தை நான் அன்று அறியவில்லை. மறுநாள் நாளிதழைப் பார்த்து மிக அதிர்ச்சிக்கு உள்ளானேன்.

பெற்றோர்களுக்கும், உற்றோர்களுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்
 

Thursday 14 June 2012

மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள்

புனித சவேரியார் கல்லூரியில் 1960 - 61 ல் புகுமுக வகுப்பில் படித்த எங்களில் சுமார் 20 பேர் வரை மதுரை மருத்துவக் கல்லூரியில் 1961 சூன் மாதம் சேர்ந்தார்கள். நான் கர்நாடக மாநிலம் மணிப்பாலில் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். விடுமுறையில் மதுரை வரும்பொழுது ஓரிரு முறை மதுரையில் மருத்துவக் கல்லூரியில் நண்பர்களைச் சந்தித்து இருக்கிறேன்.

நான் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, மணிப்பாலில் இரண்டரை ஆண்டுகளும் (Preclinical), வடகர்நாடகா மாவட்டத் தலைநகர் மங்களூரில் உள்ள எங்கள் கல்லூரியிலும், வென்லாக் தலைமை மருத்துவ மனை, பிரசவ மற்றும் பெண்கள் மருத்துவமனையான (Lady Goschen Hospital) லேடி கோஸ்சென் மருத்துவமனையிலும்       மூன்றாண்டுகளும் (Clinical) பயின்று 1969 ல் பயிற்சி மருத்துவராக மதுரையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன்.

புனித சவேரியார் கல்லூரியில் என்னுடன் படித்த நண்பர்கள் சேது, சிவானந்தன், காமராஜ் மற்றும் பலர் மதுரையில் மருத்துவக் கல்லூரியில் இருந்தனர். சிலர் பயிற்சி முடித்து அரசு வேலைக்கும், மேற்படிப்பிற்கு அமெரிக்காவும் சென்றிருந்தார்கள்.

நான் அரசுப் பணியிலிருந்தபடியே கண் மருத்துவப் பேராசிரியர்கள்  G.வேங்கடசாமி மற்றும் S.தியாகராஜன் அவர்களிடம் பயின்று, கண் சிகிட்சைத் துறையில் M.S, D.O பட்டம் பெற்றேன். 1977 லிருந்து மதுரை, தஞ்சாவூர், திருச்சி மருத்துவமனை சார்ந்த பல கண் சிகிட்சை முகாம்களில் பணிபுரிந்து பல்லாயிரக் கணக்கான பேர்களுக்கு பார்வை கிடைக்க சேவை செய்துள்ளேன். 

எங்களுடன் படித்த நெல்லை மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்த S.ஜெயபோஸ் என்ற நண்பர் அமெரிக்காவிலிருந்து சில ஆண்டுகள் வந்து தற்சமயம் மீனாக்ஷி மிஷன் மருத்துவ மனையின் குழந்தைகள் புற்று நோய்த் துறையில் பொறுப்பேற்று பணிசெய்து வருகிறார். 

மருத்துவர்கள் சேது (அறுவை சிகிட்சைத் துறை), சிவானந்தன் (காது மூக்கு தொண்டை சிகிட்சைத் துறை), காமராஜ் (குழந்தைகள் சிகிட்சைத் துறை) ஆகியோர் அவர்கள் பயின்ற சிறப்புத் துறைகளில் நிபுணர்களாக இன்றும் சிறந்து விளங்குகிறார்கள்.

Tuesday 29 May 2012

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

29.04.2012 ல் சுப்பிரமணிபுரத்தில் நடந்த அ.தி.மு.க பட்ஜெட் விளக்க கூட்டத்திற்கு மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கப்பட்டது. அருகில் உள்ள மதுரை கல்லூரி மேம்பாலத்தையும் மின்விளக்கு களால் அலங்கரித்திருந்தனர் என்ற செய்தியை வாசித்தேன்.

இதில் ஆச்சரியப்படவும், அதிர்ச்சி யடையவும் ஒன்றுமில்லை. ஏனென்றால் எல்லாத் தரப்பினரும் - அரசியல்வாதியானாலும் சரி, ஆன்மீகவாதியானாலும் சரி அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கும் சரி, கோவில் திருவிழாக்களானாலும் சரி தனியாக அனுமதி வாங்கி மீட்டர் வைத்து commercial tariff ல் மின்கட்டணம் செலுத்துவதில்லை. கவனிக்க வேண்டிய அலுவலர்களையும், அதிகாரிகளையும் கவனித்து அரசு மின்சாரத்தையே கொக்கி போட்டு எடுக்கின்றனர்.

மதுரை விளாங்குடியில் முக்கிய வீதி நேரு மெயின் வீதி. அரை கிலோமீட்டர் நீளமுள்ள பஸ் போக்குவரத்துள்ள முக்கிய வீதி. ஒரு முனையிலிருந்து வரிசையாக புறம்போக்கு இடத்தில் விநாயகர் கோயில், காளியம்மன் கோவில், முருகன் கோவில், பாலமுருகன் கோவில் என்று பல கோவில்கள்.

சமீபத்தில் பங்குனி - சித்திரை மாதத்தில் முருகன் கோவிலில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடினார்கள். தெருவை அடைத்து பந்தல் போட்டு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பகலில் காலை முதல் இரவு வரை ஒலிபெருக்கியில் உச்சத்தில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. பள்ளிக் குழந்தைகள், வயதானோர், வியாபாரம் செய்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதை யாரிடமும் புகார் செய்ய முடியாது. பொல்லாப்பும் பகையும் வளரும். பகல் நேரத்தில் பெண்கள் ரோட்டின் இருபுறமும் பொங்கல் வைக்கிறோம் என்று போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர்.

கோவிலுக்கு நேர் மேலேயுள்ள மின்வாரிய வயரில் கொக்கி போட்டு பத்து நாட்களும் மின்சாரம் எடுக்கப்பட்டது. அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் தெரியாமலில்லை. மனிதராய்ப் பார்த்து தர்ம நியாயங்களுக்கு பயந்து, கட்டுப்பாட்டுடன் நடந்தால் மட்டுமே நம் நாடு உருப்படும்.

இன்றுள்ள சூழ்நிலையில் வாய்பொத்தி, கேள்வி கேட்காமல் அநியாயங்களைக் கண்டும் காணாமல், மௌனமாய்ப் பார்த்துக் கொண்டே வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இதைத்தான் வள்ளுவர் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்று சொன்னாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
திருக்குறள் 140, அதிகாரம் 14 ஒழுக்கமுடைமை  

Friday 4 May 2012

பயணிகளின் நரகம்

டோக்கியோ நகர ரயில் பயணம் அவ்வளவு எளிதல்ல. உற்சாகம் ஊட்டுவதுமல்ல. ஜப்பான் ரயில்களில் தினமும் 8.7 மில்லியன் பயணிகள் பயணிக்கிறார்கள். ரயில் பெட்டிகளின் கொள்ளளவுக்கு மேல் இரண்டு மடங்கு பயணிகள் பயணிக்க வேண்டியிருப்பதால், ரயில் பெட்டிகளில் உள்ள இடங்களில் அனைத்துப் பயணிகளையும் அடைக்க என்றே 'ஓஷியா' என்றழைக்கப்படும் வெள்ளைக் கையுறை அணிந்த பணியாட்கள் இருக்கிறார்கள்.

ரயில் பெட்டிக்குள் அழுத்தித் தள்ளும் பணியாட்கள், ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும், ஒவ்வொரு பெட்டிக்கு முன்னும்  அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். பயணிகளை உள்ளே திணித்த பின்புதான் கதவுகள் சாத்திக் கொள்ளும், ரயிலும் கிளம்பிச் செல்லமுடியும். 

முதன்முதலில் ஷிஞ்சுகு என்ற ரயில் நிலையத்தில் மாணவர்கள் பகுதிநேர 'பயணிகள் உதவியாளர்கள்' என்று பணி புரிந்தார்கள். பின் ரயில் நிலைய பணியாளர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மோசமான நடத்தையுள்ள ஆண்களும், பெண்களும் திருடுவதும், பாலியல் தொல்லை தருவதும் உண்டு.


Wednesday 2 May 2012

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த.. புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள்

பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் ஒரு வருட வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. கல்லூரியில் ஆசிரியர்களிடமும், மாணவர் விடுதியில் நண்பர்களிடமும் விடைபெறும் நேரம். நண்பர்களின் விலாசமும், நட்பிற்கான ஒரு நற்செய்தியும் பெற கையொப்ப ஏடு (Autograph) ஏந்தி முடிந்த வரை பெற்றோம். ஒரு சில ஆசிரியர்களின் அறிவுரையுடன் கையொப்பமும் பெற்றோம்.

அந்த வருடம் புகுமுக வகுப்பில் படித்த எங்களில் சுமார் 20 பேர் வரை மதுரை மருத்துவக் கல்லூரியிலும், 20 பேர் வரை மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியிலும் 1961 சூன் மாதம் சேர்ந்தார்கள். நான் கர்நாடக மாநிலம் மணிப்பாலில் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். விடுமுறையில் மதுரை வரும்பொழுது ஓரிரு முறை மதுரையில் மருத்துவக் கல்லூரியிலும், பொறியியல் கல்லூரியிலும் நண்பர்களைச் சந்தித்து இருக்கிறேன்.

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் படித்தவர்களில் என் நினைவிலும் தொடர்பிலும் உள்ளவர்கள் அரசு போக்குவரத்துத் துறையில் உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பொறியாளர் ச.ரெங்கநாதன் மற்றும் மின்வாரியத்தில் மேற்பார்வைப் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற வெ.அழகர்சாமி ஆவார்கள். பொறியாளர் க.பாக்கியராமன் மதுரை மாகராட்சியில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்தார். (இவர் மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் திரு.முத்து அவர்களின் மருமகன்).

பொறியாளர் R.பூர்ணலிங்கம் B.E (EEE) படிக்கும்பொழுதே IAS தேர்வுக்கு தன்னை தயார் செய்தார் என்று அவருடன் படித்த நண்பர் வெ.அழகர்சாமி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் நினைத்தது போலவே IAS தேர்வாகி அரசு ஆட்சிப் பணியில் பலதுறைகளில் பணியாற்றிப் பிரகாசித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

மருத்துவராகி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் நான் உதவி மருத்துவராகப் பணியில் சேர்ந்த நேரம். வருடம் 1970 சூலை மாதம். தங்குவதற்கு இடம் தேடி வந்தபோது, தற்செயலாக எதிரில் வந்தவரைப் பார்த்து நின்றேன். சில ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த அவர்தான் என் நண்பர் பொறியாளர் வெ.அழகர்சாமி. அன்றிலிருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம்.


Saturday 28 April 2012

நீல நிலவு

ஒவ்வொரு ஆங்கில மாதத்தில் வரும் 'பௌர்ணமி நிலவு'க்கு ஒரு பெயர் குறிப்பிடப்படுகிறது.
ஜனவரி      -  Wolf Moon         -   ஓநாய் பௌர்ணமி நிலவு
பிப்ரவரி   -  Snow Moon        -    வெண்பனி பௌர்ணமி நிலவு
மார்ச்           -  Worm Moon       -   புழு பௌர்ணமி நிலவு  
ஏப்ரல்          -  Pink Moon          - இளஞ்சிவப்பு பௌர்ணமி நிலவு
மே                -  Flower Moon      -  மலர் பௌர்ணமி நிலவு
ஜூன்           - Strawberry Moon -  செம்புற்றுப்பழ பௌர்ணமி நிலவு
ஜூலை       - Buck Moon          -  ஆண் மான் பௌர்ணமி நிலவு
ஆகஸ்ட்     - Sturgeon Moon   -   கோழிமீன் (சுறா வடிவம்) பௌர்ணமி நிலவு
செப்டம்பர்  - Harvest Moon     -   சாகுபடி பௌர்ணமி நிலவு
அக்டோபர்  - Hunter's Moon    -   வேடரின் பௌர்ணமி நிலவு
நவம்பர்        -  Beaver Moon     -   நீர்நாய் பௌர்ணமி நிலவு
டிசம்பர்         -  Cold Moon        -   குளிர் பௌர்ணமி நிலவு

வருடத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமி வர வாய்ப்புண்டு. இரண்டாவதாக வரும் பௌர்ணமிக்கு (Blue Moon) ’நீல நிலவு’ என்று பெயர்.