Tuesday 29 May 2012

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

29.04.2012 ல் சுப்பிரமணிபுரத்தில் நடந்த அ.தி.மு.க பட்ஜெட் விளக்க கூட்டத்திற்கு மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கப்பட்டது. அருகில் உள்ள மதுரை கல்லூரி மேம்பாலத்தையும் மின்விளக்கு களால் அலங்கரித்திருந்தனர் என்ற செய்தியை வாசித்தேன்.

இதில் ஆச்சரியப்படவும், அதிர்ச்சி யடையவும் ஒன்றுமில்லை. ஏனென்றால் எல்லாத் தரப்பினரும் - அரசியல்வாதியானாலும் சரி, ஆன்மீகவாதியானாலும் சரி அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கும் சரி, கோவில் திருவிழாக்களானாலும் சரி தனியாக அனுமதி வாங்கி மீட்டர் வைத்து commercial tariff ல் மின்கட்டணம் செலுத்துவதில்லை. கவனிக்க வேண்டிய அலுவலர்களையும், அதிகாரிகளையும் கவனித்து அரசு மின்சாரத்தையே கொக்கி போட்டு எடுக்கின்றனர்.

மதுரை விளாங்குடியில் முக்கிய வீதி நேரு மெயின் வீதி. அரை கிலோமீட்டர் நீளமுள்ள பஸ் போக்குவரத்துள்ள முக்கிய வீதி. ஒரு முனையிலிருந்து வரிசையாக புறம்போக்கு இடத்தில் விநாயகர் கோயில், காளியம்மன் கோவில், முருகன் கோவில், பாலமுருகன் கோவில் என்று பல கோவில்கள்.

சமீபத்தில் பங்குனி - சித்திரை மாதத்தில் முருகன் கோவிலில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடினார்கள். தெருவை அடைத்து பந்தல் போட்டு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பகலில் காலை முதல் இரவு வரை ஒலிபெருக்கியில் உச்சத்தில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. பள்ளிக் குழந்தைகள், வயதானோர், வியாபாரம் செய்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதை யாரிடமும் புகார் செய்ய முடியாது. பொல்லாப்பும் பகையும் வளரும். பகல் நேரத்தில் பெண்கள் ரோட்டின் இருபுறமும் பொங்கல் வைக்கிறோம் என்று போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர்.

கோவிலுக்கு நேர் மேலேயுள்ள மின்வாரிய வயரில் கொக்கி போட்டு பத்து நாட்களும் மின்சாரம் எடுக்கப்பட்டது. அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் தெரியாமலில்லை. மனிதராய்ப் பார்த்து தர்ம நியாயங்களுக்கு பயந்து, கட்டுப்பாட்டுடன் நடந்தால் மட்டுமே நம் நாடு உருப்படும்.

இன்றுள்ள சூழ்நிலையில் வாய்பொத்தி, கேள்வி கேட்காமல் அநியாயங்களைக் கண்டும் காணாமல், மௌனமாய்ப் பார்த்துக் கொண்டே வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இதைத்தான் வள்ளுவர் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்று சொன்னாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
திருக்குறள் 140, அதிகாரம் 14 ஒழுக்கமுடைமை  

1 comment:

  1. //..அநியாயங்களைக் கண்டும் காணாமல், மௌனமாய்ப் பார்த்துக் கொண்டே வாழப் பழகிக் கொள்ள வேண்டும். //

    அப்டியா? அப்பப்ப கோபம் வந்துருமில்ல ...!

    ReplyDelete