Saturday 7 April 2012

உடல்தானம் - கண்தானம்

எழுத்து.காமில் சேதுராமலிங்கம் என்பவர் 'பகட்டு மனிதன் இறந்தால்???' என்று கவிதை பதிவு செய்திருந்தார். அதை வாசித்த மற்ற எழுத்து தளத்தின் கவிஞர்கள் சிலர் உடல்தானம் - கண்தானம் பற்றி சில விபரங்கள் என்னிடம் கேட்டிருந்தார்கள். அதற்கு பதிலாக நான் அளித்த கட்டுரையை வலைப்பூவில் அளிக்கிறேன்.

மனிதர்கள் இறந்தபின் உடல்தானம் செய்யலாம். உடல்தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் மனைவி, கணவன், மகன், மகள் போன்ற நெருங்கிய உறவினர்களிடம் தெரிவித்தும், உயிலாக எழுதி வைத்தும் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். இறந்தபின் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் அல்லது உடற்கூறு (Anatomy) துறை சார்ந்த பொறுப்பிலுள்ள மருத்துவரிடம் தெரிவித்து ஒப்புதல் கொடுத்தும் தானமளிக்கலாம்.

கடந்த ஒரு வருடத்துக்குள் என் நண்பரின் நெருங்கிய நண்பர் விருதுநகரில் வசித்த Er.தங்கமணி (இவர் எனக்கும் நண்பர்தான்) என்பவர் உடலை மதுரை மருத்துவக் கல்லூரி உடற்கூறு (Anatomy) துறைக்கு தானமளித்ததாக அறிந்தேன்.

அடுத்தது கண்தானம். உயிரோடிருக்கும் போது கண்களைத் தானம் செய்ய முடியாது. ஒருவர் இறந்த சுமார் 6 மணி நேரத்திற்குள் கண்தானம் பெற்றால் நல்லது. இதற்கும் தானம் செய்பவர் மேற்கூறிய நெருங்கிய உறவினரிடம் தெரிவித்திருக்க வேண்டும். அல்லது நெருங்கிய உறவினரின் ஒப்புதல் பேரிலும் கண்தானம் செய்யலாம்.

இறந்தவரின் கண்களை மூடி வைத்திருக்கவேண்டும். ஈரமான பஞ்சினால் கண்கள் இமையின் மேல் வைத்து கண்ணின் கருவிழி உலர்ந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். அருகிலுள்ள மருத்துவமனையின் கண் பிரிவிற்கு தெரிவித்தால் மருத்துவர்களை அனுப்பி சில நிமிடங்களில் இரு கண்களையும் எடுத்து, எடுத்தது தெரியாமல் கண் இமைகளை மூட்டி விடுவார்கள்.

டாக்டர்.வ.க.கன்னியப்பன்,
     (முன்னாள் கண் மருத்துவ பேராசிரியர்)
 மதுரை பெரிய ஆஸ்பத்திரி கண் பிரிவில் 1966 ல் இருந்து கண்தானம் பெற்று கருவிழி மாற்று அறுவை சிகிட்சை செய்யப்படுகிறது. கருவிழி என்று சொல்லப்படுகிற cornea நிறமில்லாதது. இதில் ஏற்படும் புண், பூ விழுதல், பிறவியில் ஏற்படும் Dystrophy என்ற நோய்களின் போது மட்டும் இந்த சிகிட்சை செய்யப்படுகிறது. Dr.G.வெங்கடசாமி அவர்கள் தொடங்கி, Dr.S.தியாகராஜன், Dr.சாமுவேல் ஞானதாஸ், நான், Dr.P.தியாகராஜன் (இன்றைய கண் துறைத் தலைவர்) மற்றும் Dr.சந்திரகுமார் (கண் மருத்துவ உதவிப் பேராசிரியர்) போன்றவர்கள் செய்திருக்கிறார்கள்.


அரவிந்த் கண் மருத்துவமனை 1976 ல் Dr.G.வெங்கடசாமி அவர்களால் தொடங்கப்பட்டது. கண் சம்பந்தமான அனைத்து மருத்துவ சேவைகள் செய்வதுடன், கண்தானம் பெறப்பட்ட கண்கள்   ஆயிரக்கணக்கானவர்களுக்கு Dr.M.சீனிவாசன், Dr.N.வெங்கடேஷ் பிரஜ்னா மற்றும் குழுவினர்  இங்கும் கருவிழி மாற்று அறுவை செய்திருக்கிறார்கள், செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சௌராஷ்டிரா வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் தனி முயற்சியாக இறந்தவர்கள் குடும்பத்தை அணுகி நிறைய கண்தானம் பெற்றுத் தந்திருக்கிறார். அவர் செயல் மிகுந்த பாராட்டுக்குரியது.

1 comment:

  1. உடல் தானம் செய்ய ஒரு மருத்துவ நண்பரைக் கேட்டேன். மனிதர் சிரித்துக் கொண்டே அதெல்லாம் எதற்கு சார் அப்டின்னு சொல்லிட்டு போய்ட்டார்!!

    ReplyDelete