Showing posts with label தமிழ் இலக்கியம். Show all posts
Showing posts with label தமிழ் இலக்கியம். Show all posts

Monday, 2 April 2012

சொல்லின் வனப்பே வனப்பு

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான 'சிறுபஞ்சமூலம்' என்ற நூலின் 37 வது வெண்பாவில் ஒருவற்கு 'அழகின் சிறப்பு' எதனால் அமைகிறது என்று சொல்லப்படுகிறது.

'மயிர்வனப்புங் கண்கவரு மார்பின் வனப்பு
முகிர்வனப்புங் காதின் வனப்புஞ் - செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு
 
இப்பாடலின் கருத்து
 
  ஒருவர்க்கு நன்றாக வாரப்பட்ட அழகிய தலைமுடி இருக்கலாம். மற்றவர் கண்டு மயங்கும்படியான நல்ல தோற்றமும், விரிந்த மார்பும்  இருக்கலாம். எடுப்பான காது மடல்களும், கை விரல்களில் அழகிய நீண்ட நகங்களும், கவர்ச்சிகரமான பல் வரிசையும் உடையவராக இருக்கலாம். ஆனால் இவைகளெல்லாம் ஒருவர்க்கு உண்மையான வனப்பையும், அழகையும் தராது. நல்ல கல்வியறிவும், அதற்கேற்ற இலக்கண வரம்பின்படி பேசும் திறமையும்  அமைந்திருப்பதே உண்மையான வனப்பும் அழகுமாகும். 
 
  இதற்கு நல்லதொரு உதாரணமாக, என் தந்தையார் எங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து பேச வந்த ஒரு பெரியவரைப்பற்றி மிகவும் பெருமையுடன் கூறுவார். 
     
  என் தந்தை திரு.'கன்ட்ரோல்' கன்னியப்ப முதலியார் சுமார் 40 வருடங்களுக்கு முன் சோழவந்தானில் உள்ள ஜனகை நாராயணப் பெருமாள் மற்றும் மாரியம்மன் கோவில் தக்கார் தலைவராக இருந்த சமயம். 

  அப்பொழுது ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும். அச்சமயம் தினமும் ஆன்மிக சொற்பொழிவு, நாதஸ்வர கச்சேரி நடைபெறுவதுண்டு. சிறந்த பேச்சாளர்களாக திருமுருக கிருபானந்த வாரியார், கிரிதாரிப்ரசாத், புலவர் கீரன் மற்றும் பலர் வருவதுண்டு. 

  ஒருநாள் திரு.ராமச்சந்திர பத்தர் என்பவரை சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இவர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியராக (Assistant Collector / RDO) ஆகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். இவர் ஒரு நல்ல இலக்கியவாதி. ஆன்மிகச் சொற்பொழிவாளர். பார்ப்பதற்கு மிகவும் எளியவர். கவர்ச்சிகரமான தோற்றம் கிடையாது. பார்வையில் அவர் பேச்சுத் திறமையும், கல்வியறிவையும் எடை போட இயலாது. 

  அவர் ஆன்மிகச் சொற்பொழிவாற்றும் ஆற்றல் படைத்தவர் என்று தெரிந்து எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆன்மிகச் சொற்பொழிவாற்ற அவரை ஏற்பாடு செய்ய விரும்பினர். கோவில் பணிகளில் பங்கு கொள்ளும் தமிழய்யாவும், என் அப்பாவும் ஆட்சியர் அலுவலகம் சென்று அவரைச் சந்தித்தனர். அவரும் சொற்பொழிவிற்கு  வர சம்மதித்தார்.

  அவரை சோழவந்தானிற்கு பேருந்தில் வந்து விடும்படியும், சொற்பொழிவு முடித்து எங்கள் வீட்டில் உணவருந்தி, இரவு தங்கி காலையில் செல்லும்படியும் வேண்டினர். அவர் இரவு தங்குவதற்கு தன வீட்டிற்கு செல்ல வேண்டும் என விரும்பினார். இருந்தாலும் எங்கள் வீட்டில் வசதியாகத் தங்கலாம் என்றும் வற்புத்தியதால் ஒத்துக் கொண்டார்.

  ஆனால் அன்று அவர் பேருந்தில் வந்து ஆற்றிய அருமையான சொற்பொழிவைக் கேட்டு ரசித்த என் தந்தையும், தமிழய்யாவும் மிக மகிழ்ந்தனர். உடனே என் தந்தை ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்து இரவு உணவு முடிந்து, சொற்பொழிவாளர் வியக்கும் வண்ணம் அன்றிரவே அவரின் விருப்பப்படி அவரது வீட்டில் மதுரையில் விட்டுவரச் செய்தார்.

  எனவே இந்நிகழ்ச்சியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது 'ஒருவரை புறத் தோற்றத்தை கொண்டு மதிப்பீடு செய்யலாகாது. அவரவர் கல்வியறிவு, சொல்லழகு போன்ற நற்குணங்களைக் கொண்டே மதிக்க வேண்டும்' என்பது தெளிவு.

Sunday, 1 April 2012

ஈத்துவக்கும் இன்பம்


தானங்கள் பல செய்த என் அப்பா
சோழவந்தான்  ’கன்ட்ரோல்’ கன்னியப்ப முதலியார்
அவர்களின் வலது கை
  உடன்பிறப்புகளுக்கும், உறவினர்களுக்கும், நம்மைத் தேடி வரும் வறியவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற பேருண்மையை திருவள்ளுவர் மிக அழகாக ஈகை என்னும் அதிகாரத்தில்

'ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 
வைத்திழக்கும் வன்க ணவர்'.

 என்ற திருக்குறள் (228) வழியாக வெளிச்சமாக்குகிறார்.

   ஒருவர் தம் படிப்பு, அறிவு, பூர்வீகச் செல்வம், தன் உழைப்பு வழியாக செல்வம் சேர்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நல்ல நேரம் பணம், நகை, வீடு, சேமிப்பு என்று சொத்துக்களை சேர்த்துக் கொண்டே போகிறார். பிள்ளைகள் கல்வி, மக்கள் திருமணம் என்று பெரும் செலவு. இருந்தாலும் அவரிடம் குறையாத செல்வமாய் பணம்  சேர்ந்து கொண்டிருக்கிறது

   பணத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. வருமான வரி விலக்குப் பெற, சேமிக்க என்று பலவித மியூச்சுவல் ஃபண்ட்கள், பங்கு வர்த்தக மூலதனங்கள் என்று பலவிதமாக வருமானத்தைப் பெருக்கும் திட்டங்கள் உண்டு. இதிலெல்லாம் நல்ல அனுபவமிருந்தால் மட்டுமே பணம் பெருக வாய்ப்புண்டு. இந்தத் திட்டங்களில் ஆசைப்பட்டு பெரும் பணத்தை முதலீடு செய்கிறார்.

   எவ்வளவு அனுபவமிருந்தாலும், சில நேரங்களில் நாம் எதிர்பார்த்தது நடக்காமல் இழப்பு ஏற்படுவதும் உண்டு. உதாரணமாக 2008 சனவரிக்குப் பின் மே, 2009 வரை சுமார் ஒன்றரை வருட கால கட்டத்தைச் சொல்லலாம். அதே போல 2011 ஆம் வருடத்தையும் சொல்லலாம்நடப்பாண்டில் ஏற்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சியால், அவர்களின் முதலீட்டில், 19 லட்சத்து 11 ஆயிரத்து 122 கோடி ரூபாய், மாயமாக மறைந்து விட்டது. பங்குச் சந்தை சரிவால், சராசரியாக ஒரு முதலீட்டாளருக்கு 9.70 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

   இதை நான் சொல்வதற்குக் காரணம் மியூச்சுவல் ஃபண்ட்கள் மற்றும் பங்கு வர்த்தக மூலதனங்களில் பெருமளவு இழந்ததில் நானும் ஒருவன் என்பதுதான். இதில் ஒரே ஆறுதல் நான் வட்டிக்குக் கடன் வாங்கி முதலீடு செய்யவில்லை என்பதும், என் பங்குகளும், மியூச்சுவல் ஃபண்ட்களும் மதிப்புள்ளவை என்பதும், மேலும் ஒரு வருடத்தில் இழப்பு  சமன்படும் என்ற நம்பிக்கையுமே.

   தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் (குறள், 228) என்பதில் வன்கண் - வன்-மை: பொருள்: மனக்கொடுமை, இரக்கமின்மை, கல்நெஞ்சினர் என்றும் சொல்லலாம். இத்தகைய இரக்கமில்லா தன்மையை நீக்கி, நாம் கொடுத்து உதவும்போது, அவர்கள் உள்ளத்திலும், முகத்திலும் தோன்றும் மகிழ்ச்சிக்கும், மன நிறைவுக்கும் ஈடு இணை ஏதுமில்லை என்பதை 'ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்' என்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார்

  எனவே நம் தேவைக்கு மேல் உள்ள பணத்தை, பொருளை தேவையுள்ள உடன்பிறப்புகளுக்கும், உறவினர்களுக்கும், நம்மைத் தேடி வரும் வறியவர்களுக்கும் அவர்கள் தேவையறிந்து, கல்வி, திருமணம், மருத்துவம் போன்ற நற்காரியங்களுக்கு உதவும் மனப்பான்மை வர வேண்டும், வளர வேண்டும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.  

Tuesday, 27 March 2012

பிறர்மனை நயவாமை

நாலடியார் அறத்துப்பாலில் , 'பிறர்மனை நயவாமை' என்னும் அதிகாரத்தில் 85 வது வெண்பா:

செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே, இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.

முற்பிறப்பில் ஆண் தன்மையும், ஆட்பலம், பணபலம் அதிகாரம் மற்றும் செல்வாக்கு முதலிய வலிமை உடையவராய்ப் பிறர் மதிக்க வாழ்ந்திருந்தவர் தமக்குள்ள இடம் பொருள் ஏவல் என்னும் வலிமைகளால் நடுவுநிலைமை என்னும் குணம் சிறிதுமில்லாமல் கீழ்மக்கள் கூட்டத்தோடு கூடியவராய் திரட்சி பொருந்திய கோல மெழுதிய மார்புகளையுடைய பெண்மகளின் தோள்களைச் சேர விரும்பி அயலார் மனைவியர்பாற் செல்கிறார்.

அத்தகையவர்கள் இப்பிறப்பில் அலித்தன்மையுடையவராய்ப் பிறந்து, ஆண்மையும், வலிமையையும் இழந்து பெண்ணின் நலத்தைத் துய்க்க இயலாத பிறவியாய் தெருக்களிலும், பொது இடங்களிலும் பிறர் நகைக்கக் கூத்தாடிப் பிச்சையேற்று வயிறு பிழைப்பவராவர் என்றும் 'பிறர்மனை நயவாமை'யே   அறமாகும் என்றும் கூறி இப்புலவர் அறிவுறுத்துகிறார்.

இன்றைய கால கட்டத்தில் மேற்கூறிய இழிசெயல் மட்டுமின்றி, மற்ற எளியவரின் பொருள், நிலம், வீடு மனைகளையும் செல்வாக்கு, ஆட்பலம், அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடியாக பிறர்மனை நயந்து (மனை அபகரிப்பு வழக்குகள்) அவைகளை அபகரித்துக் கொண்ட வழக்குகளில் சில அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர்களுக்குத் துணை போனவர்கள்  சிக்கி இருக்கிறார்கள். வழக்கு, நீதிமன்றம், சிறை என்று சென்று வருகிறார்கள். இவர்களும் தங்கள் செல்வாக்கை இழந்து பிறர் நகைக்க வாழ நேரவேண்டும். இது மற்ற சுயநலவாதிகளுக்கு படிப்பினையாக இருக்க வேண்டும்.